சுரண்டையை கண்டுகொள்ளாத தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் !

       சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பொது மக்கள் கடும் அவதி!
தென்காசி, ஜன. 19-
     தென்காசி மாவட்டம், சுரண்டையில் இருந்து பொங்கல் விடுமுறை சிறப்பு பஸ்கள் இயக்கப்படாததால் பொதுமக்கள் கடும் அவதியடைந்தனர்.
      தென்காசி மாவட்டம் சுரண்டை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் உள்ள பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பணியாளர்கள் சென்னை, கோவை, பெங்களூரு, , தேனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் வசித்து வருகின்றனர்.
   அவர்கள் தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ், புத்தாண்டு, பண்டிகைகள் மற்றும் தொடர் விடுமுறை நாட்களில் சொந்த ஊருக்கு வந்து செல்வர். இது வழக்கமாக உள்ளது.
    அவர்கள் ஊருக்கு வந்து விட்டு திரும்பிச் செல்ல வசதியாக கடந்த 10 வருடங்களாக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் திருநெல்வேலி மூலம் முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வந்தன. இந்நிலையில் இவ்வருடமும் முன்பதிவு இல்லாத சிறப்பு பஸ்களை இயக்க வேண்டும் எனவும் பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். ஆனால் அரசு போக்குவரத்து கழக ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சுரண்டை – சென்னை, சுரண்டை – பெங்களூரு, சுரண்டை – கோவை ஆகிய வழித்தடங்களை சேர்க்க வேண்டும் எனவும் பொதுமக்கள் பல மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தனர்.‌
   ஆனால் அரசு போக்குவரத்து கழகம் சார்பாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படாததுடன் ஆன்லைன் முன்பதிவு அட்டவணையிலும் சேர்க்கப்படவில்லை.
    ஏற்கனவே சுரண்டையில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்து வாரத்தில் 6 நாட்கள் இயக்கப்படுவதில்லை. கோவைக்கு ஒரு பஸ் மட்டுமே இயக்கப்படுகிறது. அதுவும் பண்டிகை நாட்களில் விரைவில் நிரம்பிவிடுவதால் நேரடி பயணம் செய்ய முடியாமல் பொதுமக்கள் கடும் சிரமம் அடைந்தனர் .
    இந்நிலையில் பொங்கல் பண்டிகையை கொண்டாடிவிட்டு சென்னை மற்றும் கோவைக்கு திரும்பி செல்ல வழக்கம் போல் சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என எதிர்பார்த்து வந்த 300க்கும் அதிகமான பயணிகள் குறிப்பாக பெண்களும், மாணவிகளும் கடுமையான சிரமத்திற்கு உள்ளாகினர். மேலும் அரசு போக்குவரத்து கழகம் மூலம் தென்காசி, திருநெல்வேலி, சங்கரன்கோவில், ராஜபாளையம், புளியங்குடி ஆகிய பகுதிகளுக்கு அனுப்பி வைக்கவும் உரிய ஏற்பாடுகளை செய்யவில்லை.
     ஆகவே வரும் கோடை விடுமுறை நாட்களில் சுரண்டை பகுதி மக்கள் நலன் கருதி சென்னை மற்றும் கோவையில் இருந்து சுரண்டைக்கும், சுரண்டையில் இருந்து சென்னை மற்றும் கோவைக்கும் ஆன்லைன் முன்பதிவு அட்டவணையில் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அரசு இந்த கோரிக்கையின் மீது நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு கூடுதல் பேருந்துகளை இயக்கி வசதிகளை செய்து தருமா? என்பதை நாம் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.