‘மேனலூர் பள்ளி தலைமை ஆசிரியர் கண்டிப்பானவர் தான்’

ஜோதி எம்.எல்.ஏ., பெருமிதம் !

செய்யாறு, டிச. 22 –
மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியர் தயாளன் ‘கண்டிப்புடன்’ பணியாற்றுவதால், மாணவர்கள் ஒழுக்கத்துடன் பக்குவம் அடைந்து வருவது பெருமையாக உள்ளது என, விலையில்லா மிதி வண்டிகள் வழங்கு விழாவில் ஜேதி எம்.எல்.ஏ., பேசினார்.

செய்யார் அடுத்துள்ளது மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளி. இப்பள்ளியில் பிளஸ் 1 பயின்று வரும் மாணவ – மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் விழா நேற்று நடந்தது. விழாவிற்கு வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணைத் தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் ஆகியோர் தலைமை தாங்கினார். தலைமை ஆசிரியர் தயாளன் முன்னிலை வகித்தார். செய்யார் சட்டமன்ற உறுப்பினர் ஜோதி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு மாணவ – மாணவிகளுக்கு
விலையில்லா மிதிவண்டிகள் வழங்கி அவர் பேசியதாவது; ‘மிதி வண்டிகளை பெற்றுச் செல்லும் மாணவ – மாணவிகளாகிய நீங்கள் சாலை விதிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். மேனலூர் பள்ளி தலைமையாசிரியர் தயாளன் என்றாலே மாணவர்களுக்கு ஒரு வித பயம் தான். இவர் கண்டிப்பானவர் என, சுற்றி உள்ள கிராமக்களே கூறுவதை என்னால் கேட்க முடிகிறது. மாணவர்கள் சட்டை பட்டன் போடாமல் இருக்கக் கூடாது. முடியை கண்டபடி வெட்டிகிட்டு வரக்கூடாது. தினமும் நடத்தப்படும் பாடங்களை வீட்டிற்கு சென்று படிக்க வேண்டும். 10 மற்றும் பிளஸ் 2 வகுப்பு மாணவர்கள் மாலையில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புக்களுக்கு தவறாமல் செல்ல வேண்டும். சீருடைகளை இறுக்கமாக அணிந்து வரக்கூடாது. வகுப்பறைகளை தூய்மையாக வைத்துக் கொள்ள வேண்டும்.

இன்னும் பல கெடுபிடிகளை தலைமையாசிரியர் தயாளன் மாணவர்களுக்கு விதித்துள்ளார். நீங்களும் இதை முறையாக கடைப்பிடித்து வருவதாக உங்களது பெற்றோர்களே சாட்சியாக கூறுகின்றனர். பள்ளி பருவத்தில் ஆசிரியர்கள் கூறுவதை தவறாமல் கடைபிடிக்கும் மாணவர்கள் நல்ல நிலைக்கு வருவார்கள். இப்படிப்பட்ட தலைமை ஆசிரியர் உங்களுக்கு கிடைத்தது பெரும் பாக்கியமாக நீங்கள் என்ன வேண்டும்.’ இவ்வாறு ஜோதி எம்.எல்.ஏ., பேசினார்.

இந்நிகழ்ச்சியில் தி.மு.க., பொறுப்பாளர்களான லோகநாதன், தெய்வசிகாமணி, பாபு, ராமலிங்கம், ஏகாம்பரம், ரவி, பிரபு உள்ளிட்ட ஏராளமான கலந்து கொண்டனர்.

பட விளக்கம்:

செய்யார் அடுத்த மேனலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பிளஸ் 1 பயிலும் மாணவ – மாணவிரகளுக்கு, விலையில்லா மிதிவண்டிகளை ஜோதி எம்.எல்.ஏ., வழங்கினார். வெம்பாக்கம் தி.மு.க., கிழக்கு ஒன்றிய செயலாளர் என்.சங்கர், மாவட்ட அயலக அணி துணை தலைவர்
எம்.கே.கார்த்திகேயன் உள்ளிட்ட பலரும் உடன் இருந்தனர்.