பேரணாம்பட்டில்  தமிழ்நாடு அறிவியல் இயக்க கிளை மாநாடு:

புதிய நிர்வாகிகள் தேர்வு – தீர்மானங்கள் நிறைவேற்றம்!
வேலூர், டிச. 20-
வேலூர் மாவட்டம், பேரணாம்பட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் கிளை மாநாடு,  பேரணாம்பட்டு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றது. கிளை தலைவர் கோ. ரவி  தலைமை தாங்கினார்.  மாவட்ட இணை செயலாளர் சி. எப்சி  வரவேற்று பேசினார்.
மாநாட்டை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் துளிர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் முத்து சிலுப்பன் தொடங்கி வைத்து பேசினார். மாவட்டச் செயலாளர் முனைவர். செ. நா. ஜனார்த்தனன் சிறப்புரை ஆற்றினார்.
இவ்வாண்டில் நடைபெற்ற துளிர் வினாடி–வினா போட்டியில் அதிக பள்ளிகளை பங்கேற்கச் செய்து, மாணவர்கள் மற்றும் பொதுமக்களிடையே அறிவியல் இயக்கத்தின் கருத்துக்களை எடுத்துச் சென்ற சிறந்த கிளையாக பேரணாம்பட்டு வட்டாரத்தை செயல்படுத்தியதற்காக, அதன் செயலாளர் பொன்.வள்ளுவன் மற்றும் பொறுப்பாளர்களின் சிறந்த முயற்சிகளைப் பாராட்டி, மாவட்ட அறிவியல் இயக்கத்தின் சார்பில் நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
புதிய நிர்வாகிகள் தேர்வு:
கிளை மாநாட்டில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அவர்களை ஐ.இ.எல்.சி. பள்ளிகளின் தாளாளர் க. கருணாகரப்பிள்ளை  அறிமுகம் செய்து வைத்து பேசினார்.
தலைவராக இர. கயிலைநாதன், செயலாளராக பொன். வள்ளுவன், துணைத்தலைவர்களாக
பொறியாளர் கோ. செல்வக்குமரன், அ. மா. வளர்மதி, கோ. ரவி, த. ரேணுகா, பொருளாளராக உ.அ.நஸ்ரின் பேகம், துணைச் செயலாளர்களாக  சி. ஜகுர் அஹ்மத், வ. ரவி, சி. எப்சி, துளிர் ஒருங்கிணைப்பாளர்களாக ம. பத்மநாபன், சு. எலிஷா, கேசவன் மற்றும் 17 செயற்குழு உறுப்பினர்கள் ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
1.குடிநீர் விநியோகம் : பேரணாம்பட்டு நகரில் காவிரி கூட்டுக் குடிநீர் தற்போது எட்டு நாட்களுக்கு ஒருமுறை மட்டுமே வழங்கப்படுகிறது. அரசு விதிமுறைகளின்படி மூன்று நாட்களுக்கு ஒருமுறை குடிநீர் வழங்கப்பட வேண்டும். எனவே, நகராட்சி நிர்வாகம் உடனடியாக விதிமுறைகளை நடைமுறைப் படுத்த வேண்டும்.
2.அரசு மருத்துவமனை மேம்பாடு :
போதுமான மருத்துவர்களை நியமித்து, பேரணாம்பட்டு அரசு மருத்துவமனைக்கு தாலுகா மருத்துவமனை அந்தஸ்து வழங்க வேண்டும்.
3.வடிகால் மற்றும் மழைநீர் பிரச்சனை :
வி. கோட்டா சாலை நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையப் பகுதியில் மழைநீர் தேங்குவதைத் தடுக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்.
4.சுற்றுச்சூழல் பாதுகாப்பு :
நெகிழி பயன்பாட்டைத் தடுக்கவும், குப்பையை தரம் பிரித்து சேகரிப்பது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செ. நா. ஜனார்த்தனன் நன்றி கூறினார்.