சார்பதிவாளர் அலுவலகங்களில் முறைகேடாக ஆவண பதிவு செய்வது அதிகரிப்பு!

நடவடிக்கை எடுக்கக் கோரி கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு புகார் …..

கோவை மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் போலியாக சேர்க்கப்பட்ட பட்டா மற்றும் மூல ஆவணங்களை ஆய்வு செய்யாமல்  பத்திரப் பதிவு செய்வது அதிகரித்துள்ளதாக கோவை கன்ஸ்யூமர் வாய்ஸ் அமைப்பு செயலாளர் நா லோகு சென்னையில் உள்ள வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் மற்றும் பதிவுத்துறை தலைவர் நில நிர்வாக ஆணையருக்கு எழுதிய கடிதத்தில் புகாராக தெரிவித்துள்ளார் . 

மேலும் அவர் அந்தப் புகார் மனுவில் கூறியிருப்பதாவது:

கோவை மாவட்டத்திலுள்ள  அன்னூர் மற்றும் திருப்பூர் மாவட்டம் அவினாசி சார்பதிவாளர் அலுவலகம் மற்றும் வட்டாச்சியர் அலுவலகத்தில்  முறையாக ஆவணங்கள் இல்லாமலும் போலியாக பட்டாவில் பெயர் சேர்த்தல் மற்றும் பெயர் நீக்கல்  மற்றும் மூல ஆவணங்கள்  உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களை  முழுமையாக சரிபார்க்காமல் கிரையம், பாகசாசனம் ஆகியவை  பதிவு செய்வதாகவும், இது போன்ற ஆவணப்பதிவுகள் மாலை 6 மணிக்கு மேல் பணிகள் மேற்கொள்வதாகவும்  புகார் வரப்பெற்றுள்ளது.

   பல அலுவலகங்களில் தடங்கல் மனு பதிவு செய்த பின்னரும், சார் பதிவாளர்களால்  விதிகளை மீறி சட்டவிரோத வருவாய் ஈட்டுவதற்காக இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவிக்கின்றனர்.

குறிப்பாக  அன்னூர் மசக்கவுண்டன்செட்டிபாளையம் காரேகவுண்டன்புதூர், அவினாசி  உள்ளிட்ட பல கிராம நிலங்கள் இவ்வாறு குறைவான பதிப்பீட்டுத் தொகை மற்றும் போலியாக வருவாய் ஆவணங்களில் கிராம நிர்வாக அலுவலர் உடந்தையுடன் பட்டாவில்  முறைகேடு செய்து அதன் மூலம் கிரையம், பாக சாசனம்  ஆகிய பதிவு செய்து வருகின்றனர். அவ்வாறு பதிவு செய்யப்படும்  நிலங்கள் உடனடியாக இடைத்தரகர் மூலம் விற்பனை செய்வதற்கான பணிகளை  மேற்கொள்கின்றனர்.   இதற்கு  ஆவண பதிவின்போது  மூல ஆவணம்  உள்ளிட்ட ஆவணங்களில் உண்மைத் தன்மையை ஆய்வு செய்யாமலும், வருவாய் துறை முலம் ஆவணம் தொடர்பாக விளக்கம் கேட்காமல் பதிவு செய்து வருகின்றனர்.

தற்பொழுது பதிவு சட்டம் பிரிவு 77 ஏ  நீக்கம் செய்யப்பட்டதால் போலி ஆவணம் மூலம் பதிவு செய்வதும்  அதனை ரத்து செய்ய உரிமையியல் நீதி மன்றத்தின் மூலம் பரிகாரம் காணுமாறு அறிவுறுத்தவதால்,  இதனை சாதகமாகப் பயன்படுத்தி இடைத்தரகர்களும், நில புரோக்கர்களுக்கு  சாதகமாக செயல்படுகின்றனர்.   

இதில் வருவாய் துறையினரும், பதிவுத் துறையினரும் இணைந்து செயல்படுகின்றனர்.

குறிப்பாக  கோவை  மாவட்டம் அன்னூர் சார்பதிவளாராகவும், திருப்பூர் மாவட்டம் அவினாசி சார்பதிவாளராக தற்பொழுது பணியில் இருப்பவர்கள்  அங்கு பணியில் சேர்ந்த நாள் முதல் தற்பொழுது வரை தடங்கல் மனு பெற்ற பின்னர், அதே நிலத்தில் எத்தனை ஆவணங்கள் பதிவு செய்யப்பட்டது?  அதுவும் மாலை 6 மணிக்கு மேல் பதிவு செய்யப்பட்ட ஆவணங்கள்  உள்ளிட்ட அனைத்து ஆவணங்களையும் விசாரணைக் குழு  அமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். போலி ஆவணம் மூலம்  சார்பதிவாளர் அலுவலகத்தில் முறைகேடாக பதிவு செய்யப்பட்ட ஆவணம் மற்றும்  நில மதிப்புத் தொகையை குறைத்துப் பதிவு செய்தவை உள்ளிட்ட அனைத்தும் ஆய்வு செய்வதோடு, தமிழ்நாடு முழுவதும் இது போன்று செயல்படும் அலுவலர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்தப் புகார் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கிராம நிர்வாக அலுவலர் திருமூர்த்தி இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணியில் உள்ளாராம். இவர் ஒரு லஞ்சப் பேர்வழி! என கூறப்படுகிறது.