சமூக ஊடகங்களில் கடந்த 3 நாட்களாக நடைபெறும் “கிரிகாலன் மேஜிக் ஷோ” பின்னணி இதுதான் !

அந்தப் “பிரச்சனைக்குரிய யூடியூபர்” – அவரது கடந்த காலங்களில் அவர் பிரச்சனை செய்யாத இடமே இல்லை என்கிறார்கள். அதனை அவரது ஆதரவாளர்கள் “புரட்சி” என்கிறார்கள். அது அவர்களின் கருத்து சுதந்திரம். என்னவோ சொல்லிவிட்டுப் போகட்டும்.

சுமார் 22 ஆண்டுகாலமாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் முதன்மை உறுப்பினராக உள்ள அனுபவத்தில் மிக முக்கியமான தகவல்களைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பை லா – விதிமுறைகளின்படி அதன் உறுப்பினர்கள் ஆகத் தகுதியானவர்கள்,

அரசு பதிவுபெற்ற அச்சு மற்றும் காட்சி ஊடக செய்திப்பிரிவின் “உதவி ஆசிரியர்கள், செய்தியாளர்கள், செய்தி நிழற்படக்கார்கள், செய்தி ஒளிப்பதிவாளர்கள், பிழை திருத்துவோர் (ப்ரூப் ரீடர்)” மட்டுமே.

கடந்த 11 மாதங்களுக்கு முன் நடைபெற்ற தேர்தலில், இந்த மேற்கண்ட தகுதி இல்லாத  பலர் உள்பட சுமார் 800 பேர் கூடுதலாக இணைக்கப்பட்டார்கள். அதில் ஓட்டுனர்கள், மேக் அப் கலைஞர் உள்ளிட்டோரும் அடக்கம். அன்றே இது கேள்வியாக எழுப்பப்பட்டது.

ஆனாலும், பழைய உறுப்பினர்கள் 400 பேர் + இந்த 800 பேர் கொண்ட வாக்காளர் பட்டியலை உருவாக்கியது / ஒப்புதல் வழங்கியது வேறு யாருமல்ல, மதிப்பிற்கும், மரியாதைக்கும் உரிய “ஹிந்து என் ராம், அவரது நிறுவனப் பத்திரிகையாளர் டிஎஸ்கே, நக்கீரன் கோபால், அறம் -சாவித்திரி கண்ணன் உள்ளிட்ட 12 பேர் கொண்ட வழிகாட்டும் குழு”தான்.

இவர்கள், இந்த 1200 பேரை வைத்து ஒருவாறு தேர்தல் நடத்தி முடித்தனர்.

ஆனால், இந்த வழிகாட்டும் குழு உறுப்பினர் சேர்க்கையைத் தொடங்கிய காலம் முதல்  தேர்தல் வரை நானும் என்னைப்போன்ற உறுப்பினர்களும் முன்வைத்த கோரிக்கை, சுட்டிக்காட்டல்கள்…..

உறுப்பினர் சேர்க்கையில் வரைமுறை தேவை
ஒரு குறிப்பிட்ட செய்தி நிறுவனக் குழுமத்தைசேர்ந்தவர்களை மட்டும் உறுப்பினர்களாக சேர்த்தால்…ஒரு காலகட்டத்திற்குப் பிறகு அந்த நிறுவனக் குழுமத்தின் ஆதரவு அரசியல் கட்சிகளின் கூடாரமாக மன்றம் மாறிவிடும்.
ஒரு நிறுவனக் குழுமம் அல்லது ஆதரவு ஆட்கள் நிர்வாகிகள் தேர்தலில் ஒருவர் மட்டுமே ஒரு பொறுப்புக்குப்  போட்டியிட வேண்டும்.
எடுத்துக்கட்டாக “அ டிவி” எனும் தொலைக்காட்சி குழுமம் மற்றும் பத்திரிகை குழுமத்தைச் சேர்ந்தவர்களே அல்லது ஒரு குறிப்பிட்ட கட்சிக்கு ஆதரவானவர்களே தலைவர், து. தலைவர், பொ.செயலாளர், பொருளாளர் என்று போட்டியிட்டு வெற்றி பெற்றுவிட்டால் மன்றம் ஒருவரின் ஆளுகைக்கு ஆளாகிவிடும். சனநாயகம் செத்துவிடும் என்றோம்.
ஆனால், “பாஜக உள்ள பூந்துடும் தோழர்..அதனால திமுகவுக்கு ஓட்டுப் போடுங்க” என்கிற முழக்கம் போல “25 ஆண்டுகளாகத் தேர்தல் நடக்கலை…எப்படியாவது நடக்கட்டும் தோழர்” என்று அரசு முதல் அதிகாரிகள் வரை இந்த முழக்கத்தை வைத்தே அந்தத் தேர்தல் நடத்தப்பட்டது.
ஆனால் நடந்தது என்ன….பழைய உறுப்பினர்கள் 400 பேர் தவிர புதியதாக சேர்க்கப்பட்ட சுமார் 800 பேரில் பெரும்பான்மையானவர்கள் சகோதரர் ஹாசிப் அவர்கள் தனியே நடத்திக்கொண்டிருக்கும் மாற்றத்திற்கான பத்திரிகையாளர் அமைப்பை சேர்ந்தவர்கள் அல்லது அவரது நலன் விரும்பிகள், ஆதரவாளர்கள். (இந்த 800 பேரை இணைக்க பொதுக்குழுவில் ஒப்புதல் பெறப்படவில்லை என்பது தனிக்கதை.)
தேர்தலில் வெற்றி பெற்ற நிர்வாகிகள் குழுவில் சகோதரர் சுரேஷ் வேதநாயகம் தவிர மிக முக்கியப் பொறுப்புகளான பொதுச் செயலாளர், பொருளாளர், நிர்வாகக் குழு உறுப்பினர் ஆகியோர் ஹாசிப் அமைப்பைச் சேர்ந்தவர்கள் அல்லது அவரது ஆதரவு நலன் விரும்பிகள்.
ஆக, நாம் அச்சப்பட்டது போலவே ஒரு குறிப்பிட்ட கட்சியின் ஆதரவுக் குழுவினரின் அல்லது ஒரு அமைப்பின் கைகளில் மன்ற நிர்வாகம் சென்றுவிட்டதா இல்லையா ?!

இத்தோடு நிற்கவில்லை, தேர்தல் முடிந்தவுடன் இந்த 11 மாதங்களில் மேலும் கூடுதலாக 900 பேரை இணைத்திருக்கிறார்கள். அவர்களில் பெரும்பாலானோர் யூடியூபர்கள், யூடியூப் நிறுவனத்தில் பணியாற்றுபவர்கள். (மன்ற பை லா விதிகளின்படி இவர்களை இணைக்க முடியாது)

எனவே, இந்த 900 பேருக்கு ஒப்புதல் கேட்டு கடந்த 16ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் முன்வைக்கப்பட்ட தீர்மானம் போதிய ஆதரவு இல்லாததால் தோல்வி அடைந்தது.

எண்ணிப்பாருங்கள், ஏற்கனவே ஹாசிப் ஆதரவாளரர்கள் 800 பேர், தற்போது கூடுதலாக 900 பேர். ஆக மொத்தம் 1700 பேர்.

அடுத்தடுத்து, “ஜனநாயகத்தைக் காப்பாற்ற” இவர்கள் எத்தனை தேர்தல்கள் நடத்தினாலும், இந்த அணி மட்டுமே வெற்றி பெறும். எதிரணி ஒரு வாக்கு கூடப் பெறாது.  இனி “25 ஆண்டுகளாகத் தேர்தல் நடக்கலை தோழர் என்று கூறமாட்டார்கள்…இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை தவறாமல் தேர்தல் நடத்துவார்கள்….ஆனால் தங்களின் ஆதரவாளர்கள் 1700 பேரை வைத்து இவர்களே மீண்டும் மீண்டும் வெற்றி பெறுவார்கள்.”

என்ன ஜனநாயகம், எப்பேற்பட்ட சமூக நீதி, எப்படிப்பட்ட  புரட்சி ?!

இந்த உறுப்பினர் சேர்க்கை தவிர வீட்டு வசதி வாரியத்தில் 11 பேருக்கு வீடு பெற்ற விவகாரம், முக்கியப் பூதம் !

பத்திரிகையாளர்களுக்கு வீட்டு மனை அல்லது வீடு அரசால் ஒதுக்கப்படுவது வழக்கம். வீடு குறைந்த வாடகைக்குக் கிடைக்கும்.

இந்த வீட்டை முறையாகப் பெற கலைஞர் தொலைக்காட்சி ஊழியர் தொடங்கி பலரும் பதிவு செய்து வைத்து பல மாதங்கள், ஆண்டுகளாகக் காத்துக் கிடக்கின்றனர்.

ஆனால், யாரும் சற்றும் எதிர்பாராத விதமாக 11 பேருக்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன, அதுவும் கேகே நகரில்.

அந்த 11 பேர் பட்டியலைப் பார்த்து சென்னை பத்திரிகை ஊடகவியலாளர் உலகமே பெரும் அதிர்ச்சி அடைந்தது.

காரணம், அவர்கள் வேறு யாருமல்ல ஹாசிப்பின் மாற்றத்திற்கான பத்திரிகை ஊடகவியலாளர் அமைப்பைச் சேர்ந்தவர்கள்.

சரி…அவர்களும் தகுதி உடையவர்களாக இருந்தால் பெறட்டுமே, யார் வேண்டாமென்கிறார்கள் ?. ஆனால் அதிர்ச்சி என்னவெனில், “ஏற்கனவே பலரும் வரிசைப்படி காத்திருக்க, இந்த… அதுவும் ஒரு குறிப்பிட்ட அமைப்பைச் சேர்ந்தவர்களுக்கு மட்டும் எப்படி வீடுகள் அரசால் ஒதுக்கப்பட்டன ?!”

இதில் கூடுதல் ஹைலைட் என்னவெனில் ….இதில் ஒருவர் (சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் பொருளாளர்) தமது இந்நாள் மனைவி பெயரில் ஒரு வீடு, முன்நாள் மனைவி பெயரில் ஒரு வீடு பெற்றிருக்கிறார்.

ஆக, இதுவெல்லாம் முறைகேடு இல்லை, சட்ட விரோதம் இல்லை, விதி முறை மீறல் இல்லை…..

ஆனால், சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் நலன் கருதி நான் பதிவிட்ட சில கருத்துகள்தான் சட்டவிரோதம், சமூக அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் செயல், ஆபாசம்….இல்லையா சகோதரர் ஹாசிப் அவர்களே ! இதற்காகத்தான் என் மீது பொருத்தமற்ற பொய்ப்புகார், அதன் மீது பொருத்தமற்ற பிரிவுகளின் கீழ் முதல் தகவல் அறிக்கை……?! இல்லையா ஹாசிப் சகோதரர் அவர்களே !??

கலைஞர் கருணாநிதி அவர்களின்  காலகட்டங்களில்கூட அவரே ஒருபோதும் இப்படியெல்லாம் சென்னை பத்திரிகையாளர் மன்றம் ஜனநாயகமற்று செயல்படவேண்டும் என்று தப்பித் தவறிக்கூட சிந்தித்திருக்கவில்லை. முரசொலி மாறன் அவர்களில் இருந்து, மாறன் சகோதர்கள் வரை மன்ற நிர்வாகத்தில் தலையிட்டதே இல்லை.

மு.க. ஸ்டாலின் அவர்களும் அனுபவம் வாய்ந்த தலைவர். ஆனால் அவருக்கும், துணை முதலமைச்சர் உதயநிதி அவர்களுக்கும் மன்றத்தில் நடைபெறும் உண்மையான செயல்கள் குறித்து தகவல்கள் செல்லவில்லை என்றே தெரிகிறது.

இல்லெயெனில், இப்படி முறைகேடாக வீடுகள் ஒதுக்கப்பட்டால் அது அரசுக்குத்தானே அவப்பெயர் ? வீட்டு வசதி வாரியத்துக்குதானே அவப் பெயர் ?!

அதை அவர்கள் எப்படி அனுமதிப்பார்கள் ?!

முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் அவர்களின் பத்திரிகை ஊடகவியலாளர்கள் மீதான பெருந்தன்மை, மதிப்பு, மரியாதையைத் தவறாகப் பயன்படுத்துவது ஆகாதா இது ?! களங்கம் விளைவிப்பது ஆகாதா ?!

இந்த வீட்டு வசதி முறைகேடு விவகாரம் தலைமைக்கு சென்று விடக்கூடாது என்பதற்காகவும், மக்கள் மத்தியில் சென்று விடக்கூடாது என்பதற்காகவுமே அந்த யூடியூபர் குறித்து சமூக ஊடகங்களில் பெரிய பில்ட் அப் செய்து மடைமாற்றி வருகிறார்கள்.

சென்னை பத்திரிகையாளர் மன்ற உறுப்பினரிலிருந்து நீக்குவது என்பதெல்லாம் ஒன்றும் ஐநா மன்றத்தில் இருந்து உறுப்பு நாட்டை நீக்குவதுபோல பெரிய செயல் எல்லாம் இல்லை. அது மிகச் சாதரணமானது. அதற்கு இவ்வளவு பெரிய பில்ட் அப்பெல்லாம் தேவையே இல்லை.

மேலும், ஷபீர் சென்னை பத்திரிகையாளர் மன்ற நிர்வாகி அல்ல. அவருக்கு அங்கே எந்த அதிகாரமும் இல்லை. அவர் ஒரு முதன்மை உறுப்பினர், அவ்வளவே. ஆனால் அவர்தான் அந்த அவதூறு பரப்பும் யூடியூபரை வெளியேற்றியது போல பொய்யான வதந்திகளை பரப்பி, அவர் மீது மதச் சாயம் பூசி அவதூறு பரப்பி தமிழ்நாட்டில் மத மோதல்களை உருவாக்கவும் முனைந்து வருகிறார்கள்  அந்த பிரச்சனைக்குரிய யூடியூபரின் ஆதரவாளர்கள்.

இதுவும் அரசுக்கு தேவையற்ற அவப்பெயரை உண்டாக்கும் செயல்தான்.

ஒரு பத்திரிகை ஊடகவியலாளராக திமுக மீதும் ஆக்கபூர்வமான விமர்சனக் கருத்துக்கள் எமக்கும் உண்டு. அதற்காக குற்றம் கண்டுபிடித்துக் கொண்டே இருப்பதல்ல எமது பணி.

ஆனால், சென்னை பத்திரிகையாளர் மன்றம் தொடர்பிலான உண்மை நிலவரம்  அரசுக்குத் தெரியவில்லை என்பதால் சுட்டிக்காட்ட வேண்டிய கடமை இருப்பதாகக் கருதுகிறேன். 

இன்று திமுக ஆதரவு மன்றமாக இருப்பது மகிழ்ச்சி அளித்தாலும் ஒருவேளை ஆட்சி மாறினால் அது அப்போதைய ஆளும் கட்சியின் ஆதரவு மன்றமாகவும் இதே போல அவர்கள் மாற்றுவார்கள். அப்போது அது திமுக கட்சிக்கு எதிரானதாகவும் மாறலாம் இல்லையா. இப்படி மாறி மாறி வீசிக்கொண்டால், அது பத்திரிகை ஊடக ஜனநாயகத்திற்கு பெரு மரணமாகவே அமையும்.

அடுத்து, பொதுக்குழு ஒப்புதல் பெறாமல் உறுப்பினர்களை சேர்த்தது பெரும் தவறு. இப்போது 900 பேரின் இணைப்புக்கு பொதுக்குழு ஒப்புதல் கிடைக்கவில்லை. இனி அப்படி சேர்த்தப்பட்டு அடையாள அட்டை கொடுக்கப்பட்ட  900 பேருக்கு ஹாசிப் உள்ளிட்ட நிர்வாகிகள் என்ன பதில் கூறப்போகிறார்கள் ?!

இது அந்த விலக்கப்பட்ட யூடியூபருக்கும் பொருந்தும்தானே. அவர் மீது நமக்கு எதிர் கருத்துக்கள் இருக்கலாம் ஆனால் அவரை சேர்ப்பதற்கு முன்னதாகவே சற்று பொறுங்கள், பொதுக் குழுவில் ஒப்புதல் வாங்கிவிட்டு சேர்த்துக் கொள்கிறோம் என்று கூறியிருந்தால் இந்த பஞ்சாயத்தே வந்திருக்காதே !

இறுதியாக, எம் மீது காவல்நிலையத்தில் கொடுக்கப்பட்ட பொய்ப் புகாரைத் திரும்பப் பெற்றுக்கொள்ள மன்ற செயற்குழுவில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, கடந்த 16 ம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவில் இது குறித்து வாதம் நடைபெற்றததாக அறிகிறேன். புகாரைத் திரும்பப் பெரும் பொறுப்பு என்னுடையது என்று சகோதரரும், மன்றத் தலைவருமான சுரேஷ் வேதநாயகம் அவர்கள் அறிவித்துமுள்ளார்.

எனவே,  அந்தப் புகாரையும் ஹாசிப் அவர்கள் திரும்பப் பெற்று அதற்கான முடிவு அறிக்கையை எமக்கு அனுப்பி வைக்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.

பிழைகளைத் திருத்திக் கொண்டு ஆக்கபூர்வமாக செயல்படுங்கள். உடன் நிற்கிறோம்.

-வளர்மெய்யறிவான் (எ) விசுவா விசுவநாத், 22/11/25