காட்பாடி அடுத்த வள்ளிமலை அருகே குடிதண்ணீர் வேண்டி பொதுமக்கள் திடீர் சாலை மறியல்! வேலூர், மே 24-வேலூர் மாவட்டம், காட்பாடி வட்டம், வள்ளிமலை அருகே பல கிராமங்களுக்கு சரியாக குடிநீர் விநியோகம் செய்யப்படவில்லை என்று கடந்த ஒரு மாதமாக தொடர்ந்து புகார்கள் இருந்து வந்தது. ஆனால் அரசு அலுவலர்கள் இதை கவனத்தில் கொள்ளாது அலட்சியப் போக்கில் செயல்பட்டனர். இதனால் பொறுத்து பொறுத்து பார்த்த கிராம பொதுமக்கள் பொறுமை இழந்து நேற்று திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். வள்ளிமலை அருகே தங்களது வீடுகளில் உள்ள காலி குடங்களை எடுத்துக்கொண்டு வந்து சாலையின் நடுவில் வைத்து பெண்கள் மற்றும் ஆண்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொது மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். இரண்டொரு நாளில் தடைபடாத குடிநீர் விநியோகம் செய்ய வழிவகை செய்வதாக பொன்னை போலீசார் பொதுமக்களுக்கு உத்தரவாதம் அளித்தனர். இதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் வள்ளிமலைப் பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து தடைப்பட்டது குறிப்பிடத்தக்கது.