காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் துரைமுருகனால் அவமதிக்கப்பட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்!வேலூர், ஏப். 2-வேலூர் மாவட்டம், காட்பாடி சட்டமன்ற தொகுதியில் திமுக வேட்பாளர் மற்றும் திமுகவின் பொதுச் செயலாளர் துரைமுருகன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டிருந்தார். அப்போது அவரது பிரச்சார வாகனத்தில் சில கூட்டணி கட்சி நிர்வாகிகள் ஏறி நின்று கொண்டு சென்றனர். இதனை பார்த்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநகர் மாவட்ட செயலாளர் ஃபிலிப்பும் அந்த வாகனத்தில் ஏறுவதற்கு முயற்சி செய்தார். இதை பார்த்ததும் ஆவேசமடைந்த திமுக வேட்பாளர் துரைமுருகன் எங்கே ஏறுகிறாய் இறங்கு என்று அவரை அவமரியாதை செய்து அந்த பிரச்சார வாகனத்தில் இருந்து இறக்கி விட்டார் .இதனை பார்த்த கூட்டணி கட்சி நிர்வாகிகள் மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் கடும் கோபம் கொண்டு வெகுண்டு எழுந்தனர். ஆனாலும் கூட்டணி தர்மத்தை தேர்தல் நேரத்தின் போது வெடிக்கச் செய்யக்கூடாது என்பதில் கவனமாக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அமைதியாக கலைந்து சென்றனர். இதனால் அந்த பிரச்சாரக் கூட்டத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. அத்துடன் அரசியல் நோக்கர்களும், நடுநிலையாளர்களும் பொதுமக்களும் பேசும்படியாக நிலைமை மாறியது குறிப்பிடத்தக்கது. ஏன் திமுக வேட்பாளர் துரைமுருகன் இப்படி அநாகரீகமாக பொதுவெளியில் நடந்து கொண்டார் என்பது யாருக்கும் புரியவில்லை. இது என்ன கூட்டணி ரகசியம் என்பதும், சிதம்பர ரகசியம் என்பதும் ஆண்டவனுக்கே வெளிச்சம். இதை திமுக தலைமையும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைமையும் நன்கு பரிசீலனை செய்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்று அரசியல் நோக்கர்களும், வாக்காளர்களும் ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர். இதற்கு எந்த கட்சி உரிய விளக்கத்தை பொதுமக்களுக்கு தரும் என்பதும் புரியாத புதிராக உள்ளது குறிப்பிடத்தக்கது.