முயற்சி, பயிற்சி, தொடர்ச்சி இருந்தால் மட்டுமே வாழ்க்கையில் வெற்றி பெற முடியும்: சன்பீம் பள்ளி விழாவில் சி. இ. ஓ.,பிரேமலதா பேச்சு!

வேலூர், பிப். 27-
வேலூர் அடுத்த காட்பாடி மெட்டுக்குளம் பகுதியில் உள்ள சன்பீம் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்த பள்ளி ஆண்டு விழாவில் வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஆர். பிரேமலதா கலந்து கொண்டு சிறப்புரையாற்றி பள்ளியில் பல்வேறு வகுப்புகளில் முதலிடம் மற்றும் இரண்டாம் இடம், மூன்றாம் இடம் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசு அளித்தும் மற்றும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு பள்ளிக்கு பெருமை சேர்த்த மாணவ, மாணவிகளுக்கும் பரிசு மற்றும் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். இதைதொடர்ந்து அவர் பேசும்போது கூறியதாவது: நான் குரூப் 4 தேர்வு எழுதி முதலில் அரசு பணிக்குள் நுழைந்தேன். பின்னர் எனது 21 வது வயதில் எனக்கு திருமணம் நடந்தது .இதை தொடர்ந்து திருமணம் ஆன பிறகும் நான் எனது கல்வி பயிலும் பணியை நிறுத்தாமல் தொடர்ந்தேன். திருமணத்துக்கு பிறகுதான் பிஜி என்னும் உயர் கல்வியை பயின்றேன். வருவாய் துறையில் வருவாய் ஆய்வாளராகவும் பணியாற்றியுள்ளேன் .பின்னர் இடைவிடாது கடுமையாக படித்து குரூப் 1 தேர்வில் தேர்ச்சி பெற்றேன். இதை தொடர்ந்து காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்களில் பணிபுரிந்தேன். தற்போது முதன் முதலாக பதவி உயர்வு பெற்று வேலூர் மாவட்ட முதன்மை கல்வி அலுவலராக பொறுப்பேற்று பணியாற்றி வருகிறேன். நான் வேலூருக்கு வந்தவுடன் கலந்து கொள்ளும் முதல் பள்ளி நிகழ்ச்சி இந்த சன்பீம் பள்ளியில் தான் என்பதும் குறிப்பிடத்தக்கது. என்ன படிக்க ஆசைப்பட்டாலும் அதை திறமையுடனும், விடாமுயற்சியுடன் படித்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொருவர் மனதிலும் இருக்க வேண்டும். நாம் என்னவாக ஆசைப்படுகிறோமோ அதை நாம் அடைய முடியும். அதற்கு முயற்சி, பயிற்சி, தொடர்ச்சி என்ற மூன்றும் இருக்க வேண்டும். பெண்கள் திருமணம் செய்து கொண்டாலும் படிப்பதற்கு தடை ஏதும் கிடையாது. நாம் என்ன ஆக வேண்டும் என்று நினைக்கிறோமோ அதை நாம் சாதித்தே காண்பிக்க வேண்டும். இதற்கு நானே ஒரு உதாரணமாக தற்போது உங்கள் முன் உள்ளேன். உங்களது எண்ணமெல்லாம் நாம் என்ன பணிக்கு செல்ல வேண்டும் என்பதை முடிவு செய்து கொண்டு அதன் பிறகு நாம் அந்த இலக்கை நோக்கி தொடர்ந்து விடாமுயற்சியுடன் பயணிக்க வேண்டும். வேலூர் மாவட்டத்தில் தனியார் மற்றும் அரசு பள்ளிகள் என சேர்ந்து மொத்தம் 1573 பள்ளிகள் உள்ளன. அதில் இந்த சன்பீம் பள்ளியும் ஒன்று. ஆதலால் மாணவ ,மாணவிகள் இலக்கை நோக்கி பயணம் செய்ய வேண்டும். அவர்களது எண்ணம் சிதையாமல் தொடர்ந்து இலக்கை நோக்கியே இருக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு அவர் மாணவ, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கி சன்பீம் டே என்ற பள்ளி ஆண்டு விழாவில் பேசி அரங்கத்தை அதிரச் செய்தார். இந்த பள்ளி ஆண்டு விழாவில் பள்ளியின்  தாளாளர் ஹரிகோபாலன் தலைமை வகித்தார். பள்ளியின் நிர்வாகி தங்கப்பிரகாசம் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவிகள் வரவேற்றும், இறைவணக்கம் பாடியும் பார்வையாளர்களை மகிழ்வித்தனர். இறுதியாக இறைவணக்கத்துடன் விழா இனிதே நிறைவு பெற்றது.