ஆலங்குளத்தில் மனோஜ்பாண்டியனுக்கு சீட்டா?திமுகவினர் புலம்பல்!தென்காசி, மார்ச் 24-திமுகவில் தென்காசி தெற்கு மாவட்டத்தில் இருந்த ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியானது கடந்த சில மாதங்களுக்கு முன்பு நிர்வாக வசதிக்காக அம்பாசமுத்திரம் தொகுதியுடன் இணைத்து புதியதாக திருநெல்வேலி மேற்கு மாவட்டமாக உருவாக்கப்பட்டது. இதன் மாவட்ட பொறுப்பாளராக முன்னாள் சபாநாயகர் இரா.ஆவுடையப்பன் நியமிக்கப்பட்டார்.இந்த புதிய மாவட்டம் உருவாக்கப்பட்ட பிறகு ஆலங்குளம் தொகுதியைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், கட்சியினர் கட்சி பணிகள் குறித்தோ, பல்வேறு தேவைகள் குறித்தோ மாவட்ட கழக பொறுப்பாளரை அடிக்கடி சந்திக்க முடியாத நிலை இருப்பதாகவும், தொகுதியில் கழக நிர்வாகிகள் இல்ல இன்ப, துன்பநிகழ்வுகளுக்கு கூட மாவட்ட பொறுப்பாளர் வராமல் இருப்பதால் மிகுந்த சோர்வில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கடந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவரும், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டு, ஓ.பி.எஸ். தலைமையிலான அணியில் இருந்து, திமுகவுக்கு எதிராக பணியாற்றியவருமான மனோஜ்பாண்டியன் திமுகவில் இணைந்ததும், அவருக்கு தலைமை காட்டும் முக்கியத்துவத்தால் கழக உடன்பிறப்புகள் அனைவரும் கடும் அப்செட்டில் இருந்து வருகின்றனர்.இந்நிலையில், நடைபெறவுள்ள சட்டப்பேரவை தேர்தலில் ஆலங்குளம் தொகுதியில் எனக்குத் தான் சீட்டுனு மனோஜ்பாண்டியன் சொல்லித் திரிவதால் கழக உடன்பிறப்புகள் கடும் வருத்தத்திலும், அதிருப்தியிலும் இருக்கின்றனர். கடந்த தேர்தலில் திமுகவை எதிர்த்து போட்டியிட்டு வெற்றி பெற்றவருக்கு, இந்த தேர்தலில் நாம் எப்படி வேலை பார்ப்பது என புலம்புகின்றனர். மேலும் அவர் கட்சி மாறி வந்த போதிலும் அவர் மட்டுமே வந்துள்ளார். அவரை நம்பி அதிமுகவில் இருந்தோ, ஓ.பி.எஸ்.அணியில் இருந்தோ சொல்லிக்கொள்ளும் படி எவரும் திமுகவுக்கு வரவில்லை. இது தவிர அவர் திமுகவில் இணைந்த பிறகு கூட கழகத்தினரை அனுசரித்துப் போகவில்லை. அவர் கூட இருக்கும் ஒரு சிலர் (அதிமுகவில் இருந்து வந்தர்கள்) மட்டும் வைத்துக் கொண்டுதான் அரசியல் செய்து வருகிறார். இவர் திமுக வேட்பாளராக இருந்தால் தி.மு.க விற்கு மிகப் பெரிய பின்னடைவு ஆகும் என புலம்புகின்றனர். இந்த பலவீனத்தை வைத்து அ.தி.மு.க வும், பாஜகவும் ஈஸியாக ஜெயிக்கலாம்னு ஆலங்குளம் தொகுதியை கண்வைத்து காய் நகர்த்துவதாக உடன்பிறப்புகள் கவலை கொள்கின்றனர்.முதலில் ஆலங்குளம் தொகுதிக்கு சம்பந்தமில்லாத மாவட்ட பொறுப்பாளர் நியமிக்கப்பட்டார். தற்போது கட்சிக்கும், தொகுதிக்கும் சம்பந்தமில்லாத மனோஜ் பாண்டியன் வேட்பாளர் என்பதை ஏற்றுக்கொள்ள விரும்பாத கழக உடன்பிறப்புகள் நாங்கள் அனாதை ஆகிவிட்டோம் என்று புலம்புவதை காண முடிகிறது,திமுக தலைவர் மக்கள் விரும்புகிறவர்களே திமுக வேட்பாளராக இருப்பார் என அறிவித்த நிலையில், மனோஜ் பாண்டியன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டால், அவர் மக்கள் மட்டுமின்றி கட்சிக்காரர்களும் விரும்பாத வேட்பாளராகவே இருப்பார் என்றும், நீண்ட காலம் கழக பணியாற்றியவர், அனைத்து தரப்பு மக்களிடம் செல்வாக்கு மிக்கவர், இளைஞர்களை ஆதரவாக கொண்டவர், கழக நிர்வாகிகளை அனுசரித்து செல்பவர்கள், கழகக் கொள்கை வழி நடப்பவர், கழக நிர்வாகிகளின் இன்ப, துன்பங்களில் பங்கு கொள்பவரை வேட்பாளராக நிறுத்தினால் மட்டுமே ஆலங்குளம் தி.மு.க.கோட்டையாக ஆகும் என திமுகவினர் கூறுகின்றனர்.