முன்னாள் கிரிக்கெட் வீராங்கனை மிதாலி ராஜ் – பாடகி சுனிதி சவுஹான் பங்கேற்பு!
வேலூர், பிப். 28-
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ரிவேரா 2026 கலை விழா கோலாகலமாகத் தொடங்கியது.
வேலூர் விஐடி பல்கலைக் கழகத்தில் ரிவேரா கலை விழா 26-ம் தேதி தொடங்கி மார்ச் 1-ம் தேதி வரை நான்கு நாட்கள் நடைபெற உள்ளது.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் தலைமையில் நடைபெற்ற தொடக்க விழாவில், இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு, ரிவேரா கலை விழாவை தொடங்கி வைத்தார். அவர் மாணவ, மாணவிகளின் கேள்விகளுக்குப் பதில் அளித்து பேசினார்.
விஐடி வேந்தர் கோ.விசுவநாதன் பேசியதாவது:
இந்தியா உலக அளவில் முக்கியப் பங்கு வகிக்க வேண்டும். அதை கல்வியின் மூலம் நாம் சாதிக்க வேண்டும்.
விஐ.டி.,எப்போதும் ஒரு முன்மாதிரி நிறுவனமாகத் திகழ்கிறது. நமது மாணவர்கள் உலகெங்கிலும் 84 நாடுகளில் சிறப்பாகப் பணியாற்றி வருகின்றனர்.
வேலைவாய்ப்பு கடந்த ஆண்டு 14,500 மாணவர்களுக்குச் சிறந்த நிறுவனங்களில் வேலைவாய்ப்பு கிடைத்தது. இந்த ஆண்டு இதுவரை 10,000-க்கும் மேற்பட்டோர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். இது மேலும் அதிகரிக்கும் என்றார்.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மிதாலி ராஜ் பேசுகையில், ஆர்வம் மட்டும் உங்களை எங்கும் கொண்டு செல்லாது. எல்லோரும் கனவு காண்கிறார்கள். ஆனால் நீங்கள் அதற்காகக் கடினமாக உழைக்க வேண்டும். நீங்கள் எதை நோக்கிப் பயணிக்கிறீர்கள் என்பதில் சரியான தேர்வுகளைச் செய்து அதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டும். எனவே, இந்தச் சூழலில், பொறியியல் மாணவர்களாக இருப்பதால், அதுதான் உங்களின் முன்னுரிமை, அதுதான் உங்களின் தொழில். நீங்கள் விளையாட்டை ஒரு பொழுதுபோக்காக விளையாடலாம். எந்தவொரு உடல் செயல்பாடும் உங்கள் மனதைத் தெளிவாக வைத்திருக்க எப்போதும் உதவும். விளையாட்டில் ஆர்வம் உள்ளவர்கள் தினமும் சிறிது நேரமாவது விளையாடுவதற்காகச் செலவிட வேண்டும் என்றார்.
திரைப்பட பின்னணி பாடகி சுனிதி சவுஹான் கலந்து கொண்டு திரைப்பட பாடல்களை பாடினார். இதில் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் இசை நிகழ்ச்சியை கண்டு களித்தனர்.
ரிவேரா கலை விழாவின் தொடக்க விழாவின் ஒரு பகுதியாக மாரத்தான் போட்டி காலை நடைபெற்றது. மாரத்தான் போட்டியை துணைத் தலைவர் சேகர் விசுவநாதன் தொடங்கி வைத்தார்.
இதில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ, மாணவிகளுக்கு சிறப்பு விருந்தினர் மிதாலி ராஜ் பரிசுகளை வழங்கினார்.
தொடக்க விழாவில் துணை தலைவர்கள் சங்கர் விசுவநாதன், சேகர் விசுவநாதன், செயல் இயக்குநர் சந்தியா பென்டாரெட்டி, உதவி துணை தலைவர் காதம்பரி எஸ்.விசுவநாதன், இணை துணைவேந்தர் பார்த்தசாரதி மல்லிக், பதிவாளர் ஜெயபாரதி மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் கலந்து கொண்டனர்.











Leave a Reply