காட்பாடி காவல் நிலைய வேண்டுகோளுக்கிணங்க குற்றச்சம்பவங்களை தடுக்க காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் மக்கள் முன்னெடுப்பு: போலீசாரிடம் 60 சிசிடிவி கேமராக்கள் ஒப்படைப்பு!வேலூர், பிப். 16-வேலூர் மாவட்டம், காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் பகுதியில் மக்கள் பாதுகாப்பு மற்றும் குற்றச்சம்பவங்களைத் தடுக்கும் நோக்கில், குடியிருப்போர் நலச் சங்கம் சார்பில் 60 புதிய சிசிடிவி (CCTV) கேமராக்கள் போலீசாரிடம் வழங்கப்பட்டன.

காட்பாடி தாராபடவேடு பாலாஜி நகர் பகுதியில் மொத்தம் 15 வீதிகள் உள்ளன. இப்பகுதியில் திருட்டு மற்றும் தேவையற்ற குற்றச் செயல்கள் நடைபெறுவதைத் தவிர்க்கும் பொருட்டு, பாலாஜி நகர் குடியிருப்போர் நலச் சங்கத்தினர் ஒன்றிணைந்து 60 கண்காணிப்பு கேமராக்களை அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.
இந்த கேமராக்களை பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் வகையில், காட்பாடி காவல் ஆய்வாளர் தயாளன் மற்றும் உதவி ஆய்வாளர் மணிகண்டன் ஆகியோரிடம் சங்க நிர்வாகிகள் முறைப்படி ஒப்படைத்தனர்.
மக்களால் வழங்கப்பட்ட இந்த 60 கேமராக்களும் பாலாஜி நகரின் 15 வீதிகளிலும், முக்கிய சந்திப்புகளிலும் போலீசாரின் ஆலோசனையின்படி விரைவில் அவை பொருத்தப்பட உள்ளன. இதன் மூலம் அப்பகுதி முழுமையாக போலீசாரின் கண்காணிப்பு வளையத்திற்குள் கொண்டு வரப்படும்.
பொதுமக்களின் இந்த விழிப்புணர்வு மற்றும் ஒத்துழைப்பை பாராட்டிய காவல்துறையினர், இது மற்ற பகுதிகளுக்கும் முன்மாதிரியாக அமையும் எனத் தெரிவித்தனர்.