
கோவை மாவட்டம்
பெரியநாயக்கன்பாளையம் பேருந்து நிலையம் அருகில் (29.10.2025) அன்று புதன்கிழமை காலை 11 மணியளவில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் மிகப்பெரிய மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆர்ப்பாட்டத்தில், பெரியநாயக்கன்பாளையம் பேரூராட்சி மற்றும் தமிழக அரசு இரண்டும் இணைந்து மக்களின் அடிப்படை தேவைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டுமென பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.
பேரூராட்சியின் பல வார்டுகளில் சாலைகள் குண்டும் குழியுமாக இருப்பதால் மக்கள் அவதிப்படுகின்றனர். பழுதடைந்த சாக்கடைப் பாதைகள் குப்பை மற்றும் கழிவுநீரால் நிரம்பி துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குடியிருப்பு பகுதிகளில் நோய்கள் பரவ வாய்ப்பு அதிகரித்திருப்பதாகக் கூறப்பட்டது. இந்த பிரச்சினைகளுக்கு உடனடி நடவடிக்கை எடுத்து சாலைகளும் சாக்கடைகளும் புதிதாக அமைக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோடும் ஜடல்நாயுடு வீதியும் இணைக்கும் பழுதடைந்த தரைப்பாலம் பல ஆண்டுகளாக அபாய நிலையில் உள்ளதாகவும், அப்பாலம் மாற்றாக உயர்மட்ட மேம்பாலம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
அத்துடன், பிரதான சாலைகளில் தேக்கிவைக்கப்படும் குப்பைகள் உடனடியாக வாகனங்களின் மூலம் நகருக்கு வெளியே கடத்தி, நவீன கழிவுநீர் மேலாண்மை முறைகளில் அவை அழிக்கப்பட வேண்டும் எனவும் கோரினர்.
மேலும், மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள உயர்மட்ட மேம்பாலத்தை சீர்படுத்தி, சர்வீஸ் ரோடுகளை விரிவாக்கி, போக்குவரத்து நெரிசலை தடுக்க பொது போக்குவரத்து அமைப்பை மேம்படுத்த தமிழக அரசு தலையிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
மேட்டுப்பாளையம் ரோட்டில் உள்ள மதுபானக் கடைகள் உடனடியாக அப்புறப்படுத்தப்பட வேண்டும், சாலையோர வியாபாரிகள் மற்றும் சிறு வணிகர்களுக்காக தனித்த வியாபார வளாகங்கள் அமைக்கப்பட வேண்டும், இதன்மூலம் சிறு தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழக்காமல், போக்குவரத்துக்கும் இடையூறு இல்லாமல் இருக்கச் செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்தனர்
பெரியநாயக்கன்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி, அரசு மருத்துவமனை ஆகியவை அடிப்படை வசதிகள் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளன. அவற்றை முழுமையாக மேம்படுத்தி, கல்வி மற்றும் சுகாதாரத் துறைகளில் முன்னேற்றம் ஏற்படுத்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் கோசம் எழுப்பப்பட்டது
அத்துடன் அனைத்து வார்டு பகுதிகளிலும் சாலைகளை சீரமைத்து பெயர் பலகைகள் அமைத்தல், விளையாட்டு மைதானங்கள், சிறுவர் பூங்காக்கள், ரேஷன் கடைகள், சமுதாய கூடங்கள் போன்ற அடிப்படை வசதிகள் உருவாக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.
ஆர்ப்பாட்டத்தை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எம். கோகுலகிருஷ்ணன் துவக்கி வைத்தார். ஆர்ப்பாட்டத்துக்கு கவுன்சிலர் என். சிவராஜன் தலைமை தாங்கினார். இதில் சிபிஎம் மாவட்டச் செயலாளர் சி. பத்மநாபன் அவர்கள் முக்கிய உரையாற்றி,
பெரியநாயக்கன்பாளையம் மக்களின் அடிப்படை வசதிகள் பல ஆண்டுகளாக புறக்கணிக்கப்பட்டுள்ளன. மக்கள் வரி கட்டி வாழ்ந்தும் வசதிகளை இழந்து வருகிறார்கள். தமிழக அரசும் பேரூராட்சி நிர்வாகமும் மக்களின் நலனுக்காக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்,”
என வலியுறுத்தினார்.
இந்த மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள், பெண்கள், இளைஞர்கள் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிர்வாகிகள் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இறுதியாக, ஜடல்நாயுடு வீதி கிளைச் செயலாளர் ஆர். கருப்புசாமி நன்றி கூறியதுடன், மக்கள் கோரிக்கை ஆர்ப்பாட்டம் உற்சாகக் கோஷங்களுடன் சிறப்பாக நிறைவடைந்தது.










Leave a Reply