மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரிமுன்னாள் மாணவர்(1987- 1991)கண்ணன் மறைவுக்குகண்ணீர் அஞ்சலி!

  மதுரை  மன்னர் திருமலை நாயக்கர்
கல்லூரியின் முன்னாள் மாணவரும், என்னுடைய ஆருயிர் நண்பருமான கண்ணன் மறைந்தார் என்று இன்று காலை அலைபேசி வாயிலாக சென்னையில் இருந்து தகவல் வந்தது.  தகவலை மன்னர் திருமலை நாயக்கர் கல்லூரியின் ஆங்கில இலக்கியத் துறை முன்னாள் மாணவி ஊர்மிளா பாலகிருஷ்ணன் சொல்லக்கேட்டு அதிர்ச்சியடைந்தேன்.
        கல்லூரி பருவத்தில் என்னோடு தான் அதிக நேரங்களை செலவிட்டார்.  என் அருகிலேதான் அமர்ந்து இருப்பார்.  எப்போதும் கல்லூரி வளாகத்தில், கல்லூரி கேண்டியனில் எங்குமே இரட்டையர்களாக காட்சியளிப்போம்.
         கல்லூரிப் பருவம் முடிந்தவுடன் தொடர்பில் இல்லாமல் இருந்தார்.  வெளிநாடு சென்றுவிட்டதாக கேள்விப்பட்டேன்.  வருடங்கள் பல ஓடியது.
            சற்றொப்ப நான்கு வருடங்களுக்கு முன் தமிழ்நாடு வந்துவிட்டார் என்ற தகவல் அறிந்து அலைபேசியில் தொடர்புகொண்டு பேசினேன்.   தினமும் என்னைத் தொடர்புகொண்டு நட்பு வட்டாரம், குடும்பம், கல்லூரி மாணவ- ஆசிரியர் பற்றிய நலம் விசாரிப்பு, சர்வதேச அரசியல், என பல்வேறு வகைகளில்  பேசுவார்.   
              இவரது சொந்த ஊரான புதுக்கோட்டை அரிமளத்தில் தான் எனது மூதாதையர் பிறந்து வாழ்ந்தனர் என்ற செய்தியை என் தந்தை சொல்லக்கேட்டு, அத்தகவலைக்கூட கண்ணனிடத்தில் பகிர்ந்து கொண்டேன்.  மகிழ்ச்சியடைந்தார்.   ஐஸ்வர்யா கேப்ஸ் என்ற பெயரில் டிராவல்ஸ் நடத்திவந்த கண்ணனை நேரில் சந்திக்க பலமுறை முயன்றேன். 
            மதுரை, புதுக்கோட்டை, கோயம்புத்தூர், சோழவந்தான், அலங்காநல்லூர் மற்றும் சென்னை என்று பல இடங்களில் சந்திக்கின்ற வாய்ப்பினை உருவாக்கி காத்துக்கிடந்தேன். 
        குறிப்பாக எனது குலதெய்வ  காமாட்சி கோவில் உள்ள வடக்கு தாளம்பட்டி கும்பாபிஷேகம், சிவராத்திரி திருவிழா போன்ற நாட்களில் நேரில் சந்திக்கும் வாய்ப்பினைக் கூறியும் சந்திக்க கண்ணன் வரவில்லை.  
       கண்ணன் வந்தான்….. எங்கள் கண்ணன் வந்தான்…. என கூடிக் குதூகளிக்க எண்ணிய எனக்கு இதோ வருகிறேன்…. ஒருநாள் சந்திக்கலாம் என சொன்னாரே ஒழிய சந்திக்கவில்லை.  
          குயிலே! கவிக்குயிலே யாரை எண்ணிப் பாடுகிறாய்… என்ற பாடலில் உறவுக்கு அர்த்தம் சொல்ல கண்ணன் வந்தானா?  என்ற வரி வரும்…..

அப்போது கண்ணன் ஞாபகம் வரும்….ஆனால் கண்ணன்  வராமலேயே ஏமாற்றி விட்டாரே!
           கண்ணா…. ஒருமுறை என்னை சந்தித்திருக்கலாமே!  ஏன் கண்ணா?   அண்ணன் உயரத்தில் நீ கல்லூரி யில் நடந்த நடை மறக்க முடியவில்லையே!
           போ….. கண்ணா  போ!    உன்மீது எனக்கு மிகுந்த கோபம்….
         அடுத்த பிறவி என்று உண்டென்றால் நீ வா!  கல்லுரி ப்பருவத்தில் மட்டுமல்ல!   பள்ளிப் பருவத்திலேயே வா…..

எதிர்பார்ப்புடன்

சி. தமிழ்ச்செல்வன்